மாமியாரை அழைப்பதற்காக அறைக்குள் நுழைந்தாள் நிர்மலா.
‘சொந்தத்தில கல்யாணம் முடிச்சிருந்தா இந்நேரம் ரெண்டு புள்ளையாவது உண்டாயிருக்கும். இப்ப விசனப்பட்டு என்ன பண்றது?’ உள்ளிருந்த உறவினர்களிடம் தனது கட்டைக்குரலில் முழங்கிக் கொண்டிருந்தார் மேரி.
தெளிவாகக் கேட்டிருந்தாலும் காதுகளில் எதுவும் விழாதவாறு சிரித்த முகத்துடன், ‘அத்தை ஜெபம் தொடங்கப் போகுது. சீக்கிரமா வரச் சொல்றாங்க’ என்றாள். அம்மா என்றே அதுவரை அழைத்து வந்தவள் தன்னைத்தான் அப்படி விளிக்கிறாள் என்பதை நம்ப முடியாமல் திகைப்புடன் அனைவரோடும் கூடத்துக்கு வந்து சேர்ந்தார்.
‘எல்லாரும் வந்தாச்சு அப்பா’ மாமனாரிடம் பைபிளை நீட்டினாள். எவரிடமும் அவளை விட்டுக்கொடுக்காமல் தாங்கியவர். அன்று நடக்கும் புதுமனை புகுவிழா அழைப்பிதழிலில் கணவரோடு இவளது பெயரையும் சேர்த்து இல்லத்துக்குச் சூட்டியவர். கண்களை மூட, பிரார்த்தனைத் தொடங்கியது.
‘எங்களுக்கு நல்லதொரு வீட்டைக் கொடுத்து ஆசிர்வதித்ததற்கு நன்றி இறைவா. ஏழு வருடங்களாகக் கருத்தரிக்காத இந்த மகளையும் உம் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். தேவனின் அளவில்லா கிருபையால் நிறைத்தருளும்.’
கணவரின் பெற்றோரை இனிமேல் முறைப்படி அழைப்பது என்று முடிவு செய்தாள் அந்த மருமகள்.

