‘அம்மா ஸ்கூல்ல இந்த சையத் ரொம்ப மோசம். எல்லார்கிட்டயும் வம்பு வளக்கறான். அவனோட இன்னும் ரெண்டு பேர் சேர்ந்துக்கறாங்க. அத்தனை லூட்டியடிக்கறாங்க. எங்க கிளாஸ் முழுக்க ப்ரின்ஸிபல் கிட்ட திட்டு வாங்கறதுக்கு ஒரே காரணம் அந்த குரங்குப் பசங்க.’ பள்ளி முடிந்து வந்ததும் பொரிந்து தள்ளினாள் மகள்.
‘சின்னப் பையன் குறும்பு பண்றான். அடுத்த வருஷம் சரியாகிடுவான் பாரேன்’ என்று தாய் சமாதானம் சொன்னாள்.
‘இந்த வாரமே என்னோட மூணு பென்சிலத் தொலைச்சிட்டான். அக்ஷிதாவோட முடிய இழுத்து ஜடையைக் கழட்டிவிட்டுட்டான் தெரியுமா? பாவம் அவ அழுதுட்டே ஆயாம்மாகிட்ட சீவிக்கிட்டா. மிஸ் சொன்னாலும் கேக்கறதில்ல. அவங்க அம்மாகிட்டயும் சொல்லிப் பார்த்துட்டாங்க. அப்பா ஊர்ல இல்லாததால இப்படி செய்யறான்னு சொன்னாங்களாம். எப்படியாவது அவனும் வேற ஊருக்குப் போயிடணும்.’ புலம்பல் நிற்பதாகத் தெரியவில்லை.
டிவி ஆன் செய்ததும் முக்கியச் செய்தியாக இரான் அண்டை நாடுகளின் எண்ணெய் நிலையங்களைக் தாக்குவது ஒளிபரப்பானது.
‘கடவுளே கத்தாருல எல்லாரும் பத்திரமா இருக்கணும். அவன் டாடி அங்கதான் வேலை செய்யறாங்க’ எனப் பிரார்த்தனை செய்தாள்.

